சனி, 26 டிசம்பர், 2009

அறிவே அழகு

பக்கத்துவீட்டு அக்காவை
ரொம்பவும் பிடிக்குமெனக்கு . .
எதற்கெனத் தெரியவில்லை
எங்கள் கிராமத்தில்
முதன்முதல் பொறியியல் படித்தவள் என்பதாளா?

இல்லை,
என் அப்பாவும்,தாத்தாவும் கூட பயப்படும்
கோவில் குறிசொல்பவர் குறித்து
"பித்த‌லாட்ட‌க்காரன்" என்று ஏளன‌ம் செய்யும் ப‌குத்தறிவு கண்டா?

இல்லை,
பாடப்புத்தகத்தில் மட்டும் இருக்கும்
புதுமைப்பெண்ணுக்கு
வாழும் உதாரணமாய் இருப்பதாளா?
ஏனோ சிறுவயதிலிருந்து பிடிக்குமெனக்கு . .

ஆனால்
இப்பொழுதெல்லாம் அவளை சரிவர‌ப் பிடிப்பதில்லை . .

ஒருமுறை
தன் மாநிற முகத்தை
சில வாரங்களில் சிவப்பழகாக்கும்
அழகு க்ரீம்களை கொண்டு
சிவப்பாக்க முயற்சித்த
பேதமையைக் கண்டு . .

புதன், 23 டிசம்பர், 2009

கறுப்பு

எங்க ஊர் கோயிலுக்குள்
கறுப்பு நிறத்துக்கு மட்டும் அனுமதி இல்லை
சட்டைத்துணி,கைக்கடிகாரம்
ஏன் கறுப்பு நிற‌ பெல்டைக்கூட‌
வெளியிலதான் வைத்துவிட்டுப் போகவேண்டும்

"ஆத்தாவுக்கு கறுப்பு நெறம் ஆகாதாம்,
மீறி உள்ளபோனா தண்டிச்சிடுவாளாம்"
கதை,கதையாய் சொல்லுவார்
கோவில் பூசாரி

ஆனால்
தண்டிக்கும் ஆத்தாவும்,கதை சொல்லும் பூசாரியிம்
ஒருமுறைக் கூட தடுத்ததில்லை

ஒவ்வொரு ஆண்டும்
தன் கருப்புபணத்தை செலவு செய்து
திருவிழா எடுக்கும்
மேலத்தெரு மிராசுதாரை

புதன், 16 டிசம்பர், 2009

ஆணாதிக்க வேர்

ச்சே.. என்னதான் சொல்லு
"பெங்களூரு மாதிரு இல்லடா நம்ம ஊரு"

அங்கல்லாம் பாரு
எல்லா பொண்ணுங்களும்
ஜீன்சு போட்டுகிட்டு திரியிராளுக..

இங்கயும்தான் இருக்குறாளுகளே

எவளாவது ஒருத்தி...

ம்ஹூம்..

"எல்லாம் பவாட தாவனியிம்,சுடிதாரும்தான்"..

அங்கலாயித்துக் கொண்டான்
"முந்தாநாள் கடைத்தெருவில்
தனக்கு ஜீன்சும்
தன் தங்கை ஆசையிடன் மிடி கேட்டாலும்
சுடிதார் மட்டும்
வாங்கி கொடுத்த
நண்பன் முருகேசு"

திங்கள், 23 நவம்பர், 2009

ஒரு கோடை வாழிடத்தின் கதை

முன்பு பாட்டன் காலத்த்தில்
மலை உச்சியை அடைய
நடந்துதான் செல்ல வேண்டி இருக்கும்.

பின்பு தாத்தாவின் காலத்தில்
புகைவண்டி பயணம் சாத்தியமயிற்று.

அப்பாவின் காலத்தில் நிமிடத்திற்கொருமுறை
பேருந்து பயணம் அறிமுகமாயிற்று.

இப்பொழுது நானோ
ஹெலிஹாப்டரில் சென்று விடுவேன்.


என் மகனுக்கு பிரச்சினை இல்லை


சாலை அமைக்கவும், எஸ்டேட் வளர்க்கவும்
உல்லாச விடுதிகள் கட்டவும்
மரங்களையெல்லாம் வெட்டித்தள்ளியதால்
இப்பொழுது மலை உச்சியே
அவன் வீட்டு முற்றத்தில்...

புதன், 18 நவம்பர், 2009

சட்டம் தன் கடமையைச் செய்யிம்

அங்கிருக்கும்
அனைத்து மண்பாண்ட கடைகளையிம்
அடித்து நொறுக்கினர்
அரசு அதிகாரிகள்
சாலையை ஆக்கிரமித்து
கடை விரித்திருப்பதாய் சொல்லி..

அரசை எதிர்த்து
மண்பாண்ட தொழிலாளர்களால் நடத்தப்பட்ட‌
த்தனை போராட்டங்களும்
பயனற்று போன நிலையில்
இப்பொழுதெல்லாம்
எளிதாக கடக்க முடிகின்றன அந்த சாலையை
மணல் அள்ளும் லாரிகளால்...

சனி, 14 நவம்பர், 2009

பருவம் மீட்பு படலம்

கணிப்பொறி பொறியாளராய்
நாடுகள் பலச்சுற்றி

சொந்த ஊருக்கு வந்தபோது

"வாப்பா தம்பி" என்றழைத்த
அப்பா,அம்மாவிடமும்..

"எப்பண்ணா வந்தீங்க?" என்றழைத்த‌
சகோதரியிடமும்..

"நல்லாயிருக்கீயாப்பா?" என்றே
சொல்லி வைத்தாற்போல் அழைத்த
அத்தனை சொந்த,பந்தங்களிடமும்..

கண்டுபிடிக்க முடியாத‌
என் கிராமத்து பால்ய பருவ‌த்தை
"ஏண்டா நாயே, எப்புடிடா இருக்க?" என்றழைத்த
நண்பனிடம் மட்டும்
கண்டுகொண்டேன்.

வெள்ளி, 13 நவம்பர், 2009

அன்புள்ள காதலிக்கு . . .

என் ப்ரியமானவளே!
இன்று!நீ உன்னை
மறந்துவிடச் சொல்கிறாய்.

உனக்கு தெரியாதா?
உன்னை மறப்பதும்
நான் இறப்பதும்
ஒன்றுதான் என்று...

நீ கேட்காம‌லே
மொபைல்போன் முத‌ல் முத்த‌ம் வ‌ரை
ப‌ரிச‌ளித்த‌வ‌ன் நான்.

இன்றோ!
என்னை மறந்துவிடு என‌று வாய் திற‌ந்து கேட்கிறாய்.
நானோ வாய‌டைத்து நிற்கிறேன்..
"என்னைக் காப்பாற்றுங்கள் என்று
திரௌபதி கதறியபோது
பாண்டவர்கள் நின்றது போல‌....

உன் காத‌லை த‌விர‌
எதையும் யாசிக்காத‌ நான்
முத‌ன் முத‌ல் உன்னிட‌ம் யாசிக்கிறேன்.

உன்னை ம‌ற‌ப்பதற்க்கு
சிறிது கால‌ அவ‌காச‌ம் ம‌ட்டும்
என‌க்கு கொடு..

இணையத்தால் இனைந்திருக்கும் உலகம்
இதயத்தாலும் இனையுமே!
அப்பொழுது....

ராணுவத்துறையை விட‌
சுற்றுலாதுறைக்கு அதிகம் செலவு செய்யுமே என் தேசம்!
அப்பொழுது....

இலக்கியத்திற்கான நோபல் பரிசு
ஒரு தமிழ் கவிஞனுக்கு கிடைக்குமே!
அப்பொழுது....

பெற்றோல்,டீசல்
காயப்படுத்தாத‌ காற்றை சுவாசிப்போமே!
அப்பொழுது....

நான் கவிதைக‌ள் எழுதுவதை நிறுத்துவேனே!
மன்னிக்கவும்
கவிதைக‌ள் வாசிப்பதை நிறுத்துவேனே!
அப்பொழுது....

கண்டிப்பாய் நான் உன்னை மறந்து விடுகிறேன்...

வியாழன், 12 நவம்பர், 2009

சுழலும் உலகம்

காடு திருத்தி கழனியாக்கியபோது
உயர்தினை ஆனான்
அஃறினையான‌ ஆதிவாசி..

கழனி திருத்தி
ஆலையாக்கியபோது
தன்மண்ணை தானே
பாலையாக்கியபோது
அஃறினையானான்
உயர்தினையான‌ நகரவாசி..

செவ்வாய், 10 நவம்பர், 2009

நதிக்கரை

நாடோடியாய்த் திரிந்தவன்
நதிக்கரையை அடைந்தாநதிக்கரையை அடைந்தவுடன்
நாகரிகம் அடைந்தான்.
நாகரிகம் அடைந்தவுடன்..

நாசமாக்கினான்

நதிக்கரையை மட்டுமல்ல‌
நதியையிம் சேர்த்து.

வெள்ளி, 6 நவம்பர், 2009

வலியின் வலிமை

எனக்கே தெரியாமல் என்னுள்
ஆக்ஸிஜன் போல் அமைதியாய் ஊடுறுவிய
காதல்..
பிரியிம் போது மட்டும்
ஈழநிலம் இழந்த‌
தமிழ்மகனைப் போல‌
துடித்துடிக்க வைப்பதேனோ?

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

கேள்வி

புவியியல் ஆசிரிய‌ர் பாடம் ந‌ட‌த்தினார்

"ஒரு காலத்தில் இயங்கி கொண்டிருந்து,
இப்பொழுது இயங்காமல்
இருக்கும் எரிமலைகள்
இறந்த‌ எரிமலைகள் எனப்படும்". என்று.

திருப்பிக்கேட்டேன்

ஒருகால‌த்தில் இய‌ங்கி கொண்டிருந்து,
இப்பொழுது செய‌ல‌ற்று போய்
இருக்கும்
த‌மிழ‌க‌ ந‌திக‌ளை
என்ன‌ சொல்வீர்க‌ள் என்று.